புது தில்லி: உலக சுகாதார நிறுவனத்தின் சான்றிதழ் பெற்றது என்ற விளம்பரத்துடன் கரோனாவுக்கு பதாஞ்சலி நிறுவனம் அறிமுகம் செய்த மருந்து குறித்து இந்திய மருத்துவக் கழகம் அதிர்ச்சி வெளியிட்டுள்ளது.
கரோனாவை எதிர்கொள்ளும் திறன் பெற்றது என்ற விளம்பரத்துடன் பதாஞ்சலி நிறுவனம் கரோனில் என்ற மாத்திரையை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இவ்விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அந்த நிகழ்ச்சியில், உலக சுகாதார அமைப்பின் சான்றிதழ் பெற்றது என்ற விளம்பரமும் இடம்பெற்றிருந்தது. இது குறித்து இந்திய மருத்துவக் கழகம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் விளக்கம் கேட்டுள்ளது.
ஒரு மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக இருக்கும் ஒருவர், எவ்வாறு அறிவியல்பூர்வமாக அங்கீகாரம் பெறாத, பொய்யான விளம்பரங்களுடன் கூடிய மருந்தை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும். இதனை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.