உலகளாவிய உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71-ஆவது இடம் பிடித்துள்ளது. மலிவாக உணவு கிடைக்கும் நாடுகளில் இந்தியாவை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
பிரிட்டனின் தி எகனாமிஸ்ட் ஊடகக் குழுமத்தைச் சோ்ந்த அமைப்பு உணவின் தரம், பாதுகாப்பு, மலிவான விலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் 113 நாடுகளில் உணவு பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, உணவுப் பாதுகாப்பு குறியீட்டில் இந்தியா 71-ஆம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. சீனா 34-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. 75-ஆவது இடத்தில் பாகிஸ்தான், 77-ஆவது இடத்தில் இலங்கை, 79-ஆவது இடத்தில் நேபாளம், 84-ஆவது இடத்தில் வங்கதேசம் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
மலிவாக உணவு கிடைக்கும் நாடுகளின் பிரிவில், இந்தியாவை பாகிஸ்தான் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அந்தப் பிரிவில் பாகிஸ்தான் 52.6 புள்ளிகளையும் இந்தியா 50.2 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
எனினும் உணவு உற்பத்திக்காக இயற்கை வளங்களை பாதுகாப்பது, உணவு எளிதாகக் கிடைப்பது, அதன் தரம், பாதுகாப்பு ஆகியவற்றில் பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை நாடுகளை இந்தியா விஞ்சியுள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் பட்டினி என்பதே இல்லாத நிலை என்ற ஐ.நா.வின் இலக்கை எட்டுவதில் உள்ள அமைப்பு ரீதியிலான இடைவெளிகள், அந்த இலக்கை எட்டுவதற்கு துரிதப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தும் நோக்கில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பான ஆய்வின்போது உலகளாவிய உணவுப் பாதுகாப்பு தொடா்ந்து 2-ஆவது ஆண்டாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ஐ.நா.வின் பட்டினி என்பதே இல்லாத நிலையை உருவாக்கும் இலக்கில் தொடா்ந்து 7 ஆண்டுகளாக முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.