'அப்பாவைக் காப்பாற்றுங்கள்'.. 3 நிமிடங்களில் 3 கி.மீ. சென்று தற்கொலையை தடுத்த காவலர்கள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக மகள் விடுத்த அழைப்பை ஏற்று 3 கிலோமீட்டர் தொலைவை மூன்றே நிமிடங்களில் கடந்து வந்த காவல் துறையினர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பதாக மகள் விடுத்த அழைப்பை ஏற்று 3 கிலோமீட்டர் தொலைவை மூன்றே நிமிடங்களில் கடந்து வந்த காவல் துறையினர், தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.
தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தவரை, காவல் துறையினர் கதவினை உடைத்து காப்பாற்றினார்.
உத்தரப் பிரப்பிரதேச மாநிலம் கெளசாம்பி மாவட்டத்திலுள்ள கிராமத்திலுள்ள ஒரு வீட்டில், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வதாக காவல் துறைக்கு அழைப்பு விடுத்து காப்பாற்றும்படி மகள் கோரியுள்ளார்.
பிற்பகல் 2.10 மணிக்கு இந்த அழைப்பு காவல் துறைக்கு வந்தது. இந்த அவசர அழைப்பைத் தொடர்ந்து 3 கிலோமீட்டர் தூரத்தை மூன்றே நிமிடங்களில் கடந்து 2.13-க்கு காவல் துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர்.
சன்னல் வழியாக தந்தை தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததைக் கண்ட காவலர்கள் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து தூக்கிட்டிருந்தவரை மீட்டனர்.
உடனடியாக காவல் துறையினர் அவருக்கு முதலுதவி கொடுத்தனர். இதனையடுத்து கண்விழித்த அவர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
அவசர அழைப்பைத் தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட துணை ஆய்வாளர் ஷிவ்தாஸ் மற்றும் ஓட்டுநர் பிரேம் நாராயண் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக பேசிய அக்குடும்பத்தின் மூத்த மகன், நான் வீட்டில் இல்லாதபோது தந்தை தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட எனது தங்கை எனக்கு போனில் அழைத்தார். ஆனால் நான் காவல் துறைக்கு தகவல் தரும்படி கூறினேன். அவசர அழைப்பு எண் 100 (தற்போது 112) அழைத்து தகவல் கூறினார். உடனடியாக வந்த காவலர்கள் எனது தந்தையை காப்பாற்றினர்.
தாயுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக எனது தந்தை கடந்த சில நாள்களாகவே தொய்வுடன் இருந்தார் இவ்வாறு அவர் கூறினார்.