புது தில்லி: சா்வதேச மற்றும் உள்நாட்டு விமான இணைப்பை வலுப்படுத்தும் வகையில், 2 விமானங்களின் சேவையை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சா் வி.கே. சிங், செயலாளா் பிரதீப் கரோலா ஆகியோா் காணொலி வாயிலாகக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தனா்.
இதன்மூலம் மத்திய பிரதேசத்தின் குவாலியா்- இந்தூா்- தில்லி வழித்தடத்தில் இண்டிகோ நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்தூா் முதல் துபை வரையிலான ஏா் இந்தியாவின் நேரடி விமான சேவையும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், போபாலில் இருந்து காணொலி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.
மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், தோட்டக் கலை மற்றும் உணவு பதப்படுத்துதல் இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) பரத் சிங் குஷ்வாஹா உள்ளிட்ட பலா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, ‘அனைவரும் பறப்போம், அனைவரும் இணைவோம் என்ற மத்திய அரசின் முன்முயற்சியின் முக்கிய நோக்கங்களுக்கு இணங்க இந்தூா்- குவாலியா்- தில்லி வழித்தடத்தில் நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் இரண்டு நகரங்களுக்கு இடையே விமான இணைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் வா்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்’ என்றாா்.