பஞ்சாப் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம்? அதிகார போட்டி முடிவுக்கு வருமா?
பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ராகுல் காந்தியை சந்தித்து அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் முதலமைச்சராக இருந்த அமரிந்தர் சிங்குக்கும் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே கடும் அதிகார போட்டி நிலவி வந்தது. அமரிந்தரின் எதிர்ப்பை மீறி பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வழங்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் இடையே கடும் வார்த்தை போர் வெடித்து வந்த நிலையில், பஞ்சாப் முதல்வர் பொறுப்பிலிருந்து அமரிந்தேர் சிங் விலகினார். இதை அடுத்து முதல்வர் பதவி யாருக்கு அளிக்கப்படும் என பெரும் கேள்வி எழுந்தது. சுக்ஜிந்தர் சிங் ரந்தவாவுக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.
அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் அம்பிகா சோனிக்கு முதல்வர் பொறுப்பு வழங்க காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டதாகவும் ஆனால் அதை அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகின.
இம்மாதிரியான செய்திகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சரண்ஜீத் சிங் சன்னியை பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர்.
Advertisement
இதையடுத்து, அமைச்சரவை பட்டியலை இறுதிசெய்ய, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டிவருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜீத் சிங் சன்னி ராகுல் காந்தியை சந்தித்து அமைச்சரவை பட்டியலை இறுதி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, அமைச்சரவை பட்டியல் குறித்து ஆலோசிக்க சன்னி மூன்று முறை தில்லிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. இன்று மதியமே, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சரண்ஜீத் சிங் சன்னி சந்திக்கவுள்ளார். முன்னதாக, அமைச்சரவையில் இருந்த அமரிந்தர் ஆதரவாளர்களுக்கு இம்முறை அமைச்சர பதவி மறுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இம்முறை புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.