காங்கிரஸில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் இல்லை என பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அம்மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கடந்த 18-ம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. தகவல்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தில்லிக்கு பயணம் மேற்கொண்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் அமரீந்தர் சிங் அலுவலகம் தரப்பில் இன்று வெளியிட்ட செய்தியில்,
“முன்னாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், தான் பாஜகவில் சேரவில்லை, ஆனால் காங்கிரஸில் நீடிக்கும் எண்ணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.”
பாஜகவில் இணைய போவதில்லை என அமரீந்தர் தெரிவித்திருக்கும் நிலையில், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்து புதிய கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின்றன.