ஐஆர்சிடிசி செயலி மூலம் ஆன்லைனில் பயனாளர்கள் இனி தற்போது முன்பதிவு செய்யும் எண்ணிக்கையைப் போல் இரு மடங்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியன் ரயில்வே இந்த அறிவிப்பை இன்று (ஜூன் 6) வெளியிட்டுள்ளது. தற்போது பயனாளர் ஒருவர் தனது ஆதார் அட்டையை இணைக்காமல் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். அந்த எண்ணிக்கை இந்த புதிய அறிவிப்பின்படி 12 ஆக உயர்ந்துள்ளது.
ஆதார் அட்டையை இணைத்துள்ளப் பயனாளர்கள் இதுவரை ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற வசதி இருந்தது. இனி ஆதார் அட்டையினை இணைத்துள்ள பயனாளர்கள் தற்போது முன்பதிவு செய்யும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இருமடங்கு அதிகமாக, அதாவது மாதத்திற்கு அதிகபட்சமாக 24 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த சேவையைப் பெற இரண்டு நிபந்தனைகள் உள்ளன. டிக்கெட் முன்பதிவு செய்பவரின் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். யாருக்காக டிக்கெட் முன்பதிவு செய்கிறார்களோ அவர்களில் ஒருவரது ஆதார் அட்டை பரிசோதிக்கப்படும்.