முகப்பு
இந்தியா

வேலைக்கு செல்வதும், வீட்டிலிருப்பதும் பெண்களின் விருப்பம்: மும்பை உயர் நீதிமன்றம்

ஒரு பெண் படித்த பட்டதாரி என்பதால் அவரை வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில் வாழ வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Updated On : 11 ஜூன், 2022 at 4:26 PM
கோப்புப் படம்
பகிர்:

ஒரு பெண் படித்த பட்டதாரி என்பதால் அவரை வேலைக்குச் சென்று அந்த வருமானத்தில் வாழ வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தனது மனைவிக்கு ஜீவனாம்சம் அளிக்க வேண்டும் என்ற புணே குடும்ப நீதிமன்ற  உத்தரவை எதிர்த்து முறையிட்ட நபரை அவரது மனைவிக்கு ஜீவானம்சம் கொடுக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த முறையீடு நீதிபதி பாரதி தாங்ரே அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்கள் வேலைக்கு செல்வதற்கும், வீட்டிலிருப்பதற்கும் உரிமை உள்ளது. அந்தப் பெண் பட்டப் படிப்பு படித்திருந்தாலும் அவருக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருப்பதற்கு உரிமை உள்ளது என தெரிவித்தது.

Advertisement

இந்த முறையீடு குறித்து நீதிபதி தாங்ரே கூறியதாவது, “ நமது சமூகம் வீட்டிலிருக்கும் பெண்கள் பொருளாதார ரீதியாக தங்களது பங்களிப்பை கொடுக்க வேண்டும் என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது பெண்களின் தனிப்பட்ட விருப்பம். அவர்களை வேலை செய்யக் கூறி கட்டாயப்படுத்தக் கூடாது. அதேபோல பட்டப்படிப்பு படித்தப் பெண் படித்து விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வீட்டிலிருக்காமல் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை. இன்றைக்கு நான் இந்த நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கிறேன். நாளை ஒரு வேளை நான் வீட்டிலிருந்தால், நீங்கள் ஒரு நீதிபதி அதனால் வீட்டில் இருக்கக் கூடாது வேலை பார்த்துதான் ஆக வேண்டும் எனக் கூறுவீர்களா?”  என்றார்.

புணே குடும்ப நீதிமன்றம் அவரது மனைவிக்கு மனுதாரர் மாதந்தோறும் ரூ.5000 மற்றும் மனைவியிடம் வளரும் அவரது 13 வயது குழந்தையின் படிப்பு செலவிற்கு மாதம் ரூ.7000  வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.