தில்லியில் சாலை வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் வாகன நெரிசலைக் குறைத்து காற்று மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தலைநகரான தில்லியில் சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.62 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் சாலைவசதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதின் கட்காரி, நாங்கள் தில்லியில் காற்று மாசைக் குறைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம். தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக மட்டும் என்னுடைய துறையிலிருந்து ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் நகரைச் சுற்றிலும் வெளிவட்டச் சாலைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் தில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும். மேலும், 2040ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் சாலைகளை அமெரிக்க நாட்டின் சாலைகளுக்கு இணையாக மாற்றுவதை இலக்காக கொண்டுள்ளோம்.
தில்லி விமான நிலையத்திலிருந்து நகரத்தின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல ஒருமணி நேரத்திற்கும் மேலாகிறது. இதனை நானே அனுபவைத்துள்ளேன். இதனால் சாலைகளை விரிவுபடுத்தி பயண நேரங்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்.
தில்லியிலிருந்து ஜெய்ப்பூர், தில்லியிலிருந்து ஹரித்வார் போன்ற நகரங்களுக்கு 2 மணிநேரத்தில் சென்றுவிடலாம். தில்லியிலிருந்து மும்பைக்கு 12 மணிநேரத்தில் சாலைமார்க்கமாகவே செல்லும் வகையில் சாலைவசதிகள் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.