ஹைதராபாத்: வாட்ஸ்ஆப் செயலியில் தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வந்த விடியோ அழைப்பை எடுத்து இளைஞரை மிரட்டி ஒரு கும்பல் ரூ.55,000-ஐ பிடுங்கியுள்ளது.
இது குறித்து அந்த இளைஞர் கூறுகையில், விடியோ காலில் அழைத்தவர்கள் தன்னை மிரட்டி பணம் கேட்டதாகவும் இல்லையென்றால் எனது புகைப்படத்தை வைத்து மார்ஃபிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறியுள்ளார்.
ஒரு சில நாள்களுக்கு முன்பு, தனக்குத் தெரியாத எண்ணிலிருந்து வாட்ஸ் ஆப் அழைப்பு வந்துள்ளது. இவரும் எடுத்துள்ளார். ஆனால் அந்த அழைப்பை எடுத்த போது அதில் யாரும் இல்லை, எந்தக் குரலும் வரவில்லை. இதனால் அழைப்பை துண்டித்துவிட்டேன். ஒரு சில நிமிடங்களில், எனது மார்ஃபிங் செய்யப்பட்ட விடியோ ஒன்று எனது செல்லிடப்பேசிக்கு வந்தது.
உடனடியாக தனக்கு பணம் அனுப்பவில்லையென்றால், இந்த விடியோவை, எனது செல்லிடப்பேசியில் இருக்கும் எண்களுக்கு அனுப்பி விடுவதாக மிரட்டினார்கள்.
இப்படி மிரட்டியே ரூ.5,000, பிறகு ரூ.30,000, மூன்றாவது முறையாக ரூ.20,000 என பிடுங்கியுள்ளது. மிரட்டல் தொடர்ந்ததால், அவர் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
இதுபோன்று ஏராளமான மோசடிகள் நடப்பதாக காவல்துறை ஏற்கனவே பல முறை எச்சரிக்கை விடுத்தும், தொடர்ந்து மோசடி கும்பல்களிடம் பலரும் சிக்குவது குறித்து காவல்துறையினரும் கவலை தெரிவித்துள்ளனர்.