முதியோர் கட்டணச் சலுகை: மீண்டும் அமல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை
ரயில் பயணக் கட்டணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ரயில் பயணக் கட்டணத்தில் முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா அதிகரித்த போது கடந்த 2020 மார்ச் மாதம் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டு பின்னர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போது ரயில் பயணக் கட்டணத்தில் வழங்கப்பட்டு வந்த அனைத்து விதமான சலுகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, கரோனா தாக்கம் குறைந்து ரயில் பயணங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கிட்டத்திட்ட ஓராண்டு ஆகும் நிலையில், முதியோருக்கான(மூத்த குடிமகன்) கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகள் இன்னும் அமல்படுத்தப்படாமல் உள்ளன.
இதையும் படிக்க | விஸ்மயா தற்கொலை: கணவர் குற்றவாளி என தீர்ப்பு
இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் பினாய் விஸ்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:
“கரோனா தொற்று ஏற்பட்ட போது பாதுகாப்பு காரணத்திற்காக கட்டணச் சலுகைகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது நாடு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், கரோனாவை பயன்படுத்தி சலுகைகளை முழுமையாக விலக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.
சலுகைகள் ரத்து செய்யப்பட்ட பிறகு, மார்ச் 2020 முதல் 2022 வரை ரயில்களில் 7 கோடி முதியவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த கடினமாக சூழலில், பல முதியவர்களால் முழுமையான கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.
அவர்கள் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காக உழைத்துள்ளனர். அவர்களின் ஓய்வு காலத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். ரயில்களில் மீண்டும் கட்டணச் சலுகைகளை அமல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.