பெரு தலைநகர் லிமாவில் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் வாகனத்தின் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
லிமா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர்பஸ் ஏ320 என்ற விமானம் புறப்பட்டது. அதில் 102 பயணிகள் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில் விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே வேகமாக எழும்பிய போது, அங்குச் சென்றுகொண்டிருந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் மீது விமானம் மோதியது. வாகனத்தின் மீது மோதியதில் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது.
விமானத்தில் தீப்பொறிகள் பறந்தபடி, சற்று தூரம் சென்று விமானம் நின்றது. விமானத்திலிருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்ட நிலையில், அலறி கூச்சலிட்டனர்.
சம்பவ இடத்துக்குத் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து விமானத்தில் எரிந்த தீயைக் கட்டுப்படுத்தினர். விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஆனால், விமானம் மோதியதில், தீயணைப்பு படையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்நாட்டுத் தலைவர் பெட்ரோ காஸ்டிலோ தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்குத் தனது இரங்கலை சுட்டுரை மூலம் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.