வாட்ஸ்ஆப் செயலி இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது.
வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுட்டுரை, முகநூல் போன்ற பிற சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தன. வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும், வாட்ஸ்ஆப் அழைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் குவிந்தன.
படிக்க | வாட்ஸ்ஆப் சேவை 2 மணிநேரம் முடக்கம்! பயனர்கள் அவதி
இந்த புகார்கள் தொடர்பாக வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா பதிலளித்தது. தொழில்நுட்பக் குழுவினர் சோதனை செய்து வருவதாகவும், 24 மணிநேரத்தில் வாட்ஸ்ஆப் சேவை மீண்டும் சீராக்கப்படும் எனவும் பயனர்களுக்கு அறிக்கை மூலம் மெட்டா நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை இன்று (அக்.25) பிற்பகல் 12.30 மணி முதல் வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு இந்த நிலையே நீடித்தது.
வாட்ஸ்ஆப் நிறுவன தரவுகளின்படி, மும்பை, தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னெள மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிக அளவாக வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.