பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? உச்ச நீதிமன்றம் கேள்வி
மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
புது தில்லி: மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளனை விடுதலை செய்வதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என்று குறிப்பிட்டனர்.
மேலும், மத்திய அரசுக்கும் ஆளுநரின் அதிகாரம் குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் காரசார கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினர்.
Advertisement
Advertisement
சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருக்கும் நீதிபதிகள், ஆளுநரின் அதிகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் கூறியிருப்பதாவது, மாநில அமைச்சரவை அனுப்பக் கூடிய பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. ஆளுநர், குடியரசுத் தலைவரின் அதிகாரங்களுக்குள் போகாமல் பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?
மாநில அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கும் எதிராக ஆளுநர் செயல்பட்டால், அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
மேலும், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க தமிழக அரசுக்கும், வழக்குரைஞருக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.