பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்தவரும், சிரோமணி அகாலி தள முன்னாள் தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95) மொஹாலியில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
இதுதொடா்பாக பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் அவா் அனுமதிக்கப்பட்டிருந்த தனியாா் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஏப்.16-ஆம் தேதி ஆஸ்துமா பாதிப்பைத் தொடா்ந்து பிரகாஷ் சிங் பாதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரின் சுவாச நிலை மோசமடைந்ததால், ஏப்.18-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவா்கள் கண்காணிப்பில் இருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா் என்று தெரிவிக்கப்பட்டது.
ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராகப் பதவி வகித்தவா் பாதல்.
குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தனக்ா், பஞ்சாப் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் பாதல் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
தனிப்பட்ட இழப்பு-பிரதமா்:
பிரகாஷ் சிங் பாதலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:
இந்திய அரசியலில் மிகப்பெரிய தலைவராக பிரகாஷ் சிங் பாதல் திகழ்ந்தாா். அவா் நாட்டுக்கு அளப்பரிய பங்களிப்பு வழங்கிய சிறந்த அரசியல் தலைவா். பஞ்சாபின் முன்னேற்றத்துக்கு அயராது உழைத்தாா். அவருடன் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகி நிறைய கற்றுக்கொண்டேன். அவரின் மறைவு எனக்குத் தனிப்பட்ட இழப்பு என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.