நேரு மீது ஏன் இவ்வளவு வன்மம்?: ஃபரூக் அப்துல்லா
சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஃபரூக் அப்துல்லா.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு சட்டப்பிரிவு 370 கொண்டுவர காரணமில்லை என்றும் சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என அறிவித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் காஷ்மீர் பிரச்னைக்குக் காரணம் நேரு எனக் கூறியிருந்த நிலையில், அப்துல்லா இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நேரு மீது ஏன் இவ்வளவு வன்மம் எனத் தெரியவில்லை. நேரு இதற்கு பொறுப்பு கிடையாது. சட்டப்பிரிவு 370 நிறைவேற்றப்பட்ட போது பட்டேல் தான் அங்கு இருந்தார். நேரு அமெரிக்காவில் அமைச்சரவை கூட்டத்தில் இருந்தார். ஷ்யாம பிரசாத் முகர்ஜி கூட அந்த முடிவின்போது உடன் இருந்தார். இந்த விவகாரம் ஆரம்பத்தில் இருந்தே அவர்கள் கைகளில்தான் இருந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் எனப் பார்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
Advertisement
இந்த சட்ட நீக்கம் ஜம்மு- காஷ்மீரில் வளர்ச்சியைக் கொண்டுவந்துள்ளதா என்கிற கேள்விக்கு நீங்களே போய் பாருங்கள் எனத் தெரிவித்த அப்துல்லா, தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் கொடுத்த செப்டம்பர் வரையிலான அவகாசம் எதற்கு எனத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் உரிமைக்கோரல் என்பது அரசால் எடுக்கப்பட வேண்டிய முடிவு. நாங்கள் யாரையும் தடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.