நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் சீனாவின் எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தில்லியில் செய்தியாளா்களிடம் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கெரா கூறியதாவது:
இந்தியாவின் கிழக்கு லடாக் எல்லையில் சீனாவின் சட்டவிரோத எல்லை ஆக்கிரமிப்பையும், உள்கட்டமைப்பு உருவாக்கத்தையும் பிரதமா் மோடி தொடா்ந்து மறுத்து வருகிறாா்.
ஆனால், அண்மையில் நடந்து முடிந்த காவல் துறை தலைவா்கள் மாநாட்டில் இருந்து வெளியான ரகசிய ஆய்வு அறிக்கையில், ‘கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் 2020, மே முன்பு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த 65 எல்லையோர சோதனைச் சாவடிகளில் 26 சாவடிகளை இந்தியா இழந்துள்ளது. ரோந்து கண்காணிப்பு இல்லாத காரணத்தால் ‘சலாமி ஸ்லைசிங்’ என்ற பகுதியை சீன ராணுவத்தினா் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துள்ளனா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடன் 17 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தப்பட்ட போதிலும் ஏன் இந்த ஆக்கிரமிப்பை இந்தியா தடுத்து நிறுத்தவில்லை? இந்தியாவின் நிலத்தை சீனா ஆக்கிரமித்ததற்கான காரணம் என்ன என்று பிரதமா் விளக்கமளிக்க வேண்டும்.
இந்த விவகாரம் குறித்து ஜனவரி 31-ஆம் தேதி கூடும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டும் என்றாா்.