கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது.
கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் மே 10 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இத் தோ்தலில் ஆட்சியை தக்கவைக்க பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் கா்நாடகத்தில் தீவிர சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
அதில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி மற்றும் உகாதி, விநாயகர் சதுர்த்தி மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு 3 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். உயர்மட்டக் குழுவின் பரிந்துரையை ஏற்று மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் 10 லட்சம் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள்தோறும் அரைலிட்டர் நந்தினி நிறுவன பால் இலவசமாக வழங்கப்படும். ரூ.1000 கோடி செலவில் புராதண கோயில்கள் புணரமைக்கப்படும்.
ஆண்டுக்கு ஒரு முறை வயதானவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை. 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு நகராட்சியிலும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்க அடல் உணவகம் தொடங்கப்படும். மிஷன் ஸ்வஸ்தையா கர்நாடகா என்ற பெயரில் அனைத்து வசதிகளுடன் அனைத்து வார்டுகளிலும் கிளினிக் அமைக்கப்படும். பட்டியலின குடும்ப தலைவிகளுக்கு வங்கிக் கணக்கில் 5 ஆண்டிற்கான ரூ.10,000 வைப்பு நிதி வைக்கப்படும. மாநிலம் முழுவதும் 10 லட்சம் வீடற்றவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
விஸ்வேஸ்வரய்யா வித்யா திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும். என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.