பனாஜி: சர்வேதேச திரைப்பட விழாவுக்கான அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து, ஆதார் விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட நபர்களின் விவரங்கள் கசிந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களின் ஆதார் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பலவும் எளிதாக பொதுமக்கள் பார்வையிடும்ட வகையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதாவது, சர்வதேச திரைப்பட விழாவுக்கான இணையதளத்தில் சைபர் பாதுகாப்பு முறையாக செய்யப்படவில்லை என்பதும், இணைதளத்துக்குச் சென்றால், அதில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களின் 12 இலக்க ஆதார் எண், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் நகலைக் கூட பெற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎம்ஓடி23 நிகழ்வில் பங்கேற்க நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், இதில் பெண்கள் உள்ளிட்ட அனைவரின் விவரங்களையும் வெளிநபர்கள் எளிதாக காணும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இளைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில், மத்திய தகவல் மற்றும் ஒளிரப்புத் துறை அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தங்களது விவரங்கள் இப்படி பொதுவெளியில் தெரியவரும் என்று எண்ணியிருக்க மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.