பிரிட்டன் போராட்டம்: இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை!
பிரிட்டனில் உள்நாட்டு போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
பிரிட்டனில் உள்நாட்டு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் கவனத்துடன் இருக்க லண்டனில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பிரிட்டனில் மூன்று சிறுமிகள் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இரண்டாவது வாரமாக பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
நாட்டில் பல்வேறு நகரங்களில் இஸ்லாமிய சமூகத்தினருக்கும், புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
Advertisement
இந்த நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்,
“பிரிட்டனின் சில பகுதிகளில் கலவரம் ஏற்பட்டுள்ளதை இந்திய பயணிகள் அறிவீர். பிரிட்டனின் நிலவரத்தை தூதரகம் தீவிரமாக கவனித்து வருகின்றது. இந்தியாவில் இருந்து பிரிட்டன் வரும் பயணிகள் சூழ்நிலையை அறிந்து கவனமுடன் இருக்க வேண்டும். உள்ளூர் செய்திகள் மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்ற வேண்டும். போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர தேவைக்கு தூதரகத்தை நாட விரும்புவோர் +44(0) 20 7836 9147 என்ற எண்ணில் அல்லது inf.london@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.