முகப்பு
இந்தியா

ஆந்திரம்; மருந்து நிறுவனத்தில் வெடி விபத்து: பலி 17 ஆக உயர்வு!

ஆந்திரத்தில் மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் பலி 17 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 2:48 am IST
பகிர்:

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள மருந்து நிறுவனத்தில் பாய்லர் வெடித்ததில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

அச்சுதாபுரம் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் உள்ள எசியன்ஷியா (Escientia) மருந்து நிறுவனத்தில் பாய்லரில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மதிய உணவு இடைவேளையில் பெரும்பாலான தொழிலாளர்கள் உணவருந்த சென்று இருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அனகாபள்ளி மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் கூறுகையில், “இந்த சம்பவம் அணு உலை வெடித்ததால் நடந்தது அல்ல. ஆரம்பத்தில், ரசாயன உலையில் வெடிப்பு ஏற்பட்டதாக ஊடகத்தில் தகவல்கள் வெளியாகின. இந்த சம்பவத்தில் மின்சாரம் தொடர்பான தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

Advertisement

Advertisement

காயமடைந்த சுமார் 30 பேர் அனகாபள்ளி மற்றும் அச்சுதாபுரத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும்,13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக என்டிஆர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்றார்.

இதுகுறித்து அனகப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவ பிரசாத் கூறியதாவது:

காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் நிலைமை அமைதியாக உள்ளது. தொழிற்சாலை இரண்டு ஷிப்டுகளில் 381 ஊழியர்களுடன் செயல்பட்டுவருகிறது. மதிய உணவு நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், குறைந்தளவிலான ஊழியர்கள் பணியில் இருந்தனர்” என்றார்.

இதனிடையே, 17 பேர் உயிரிழந்ததற்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியளித்துள்ளார்.

இதுபோன்று பாய்லர் வெடிப்பது முதல்முறையல்ல. கடந்த ஜூலை மாதம், அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் அணுஉலை வெடித்ததில் ஒரு தொழிலாளி பலியானார். இருவர் காயமடைந்தனர். 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், அச்சுதாபுரத்தில் உள்ள மருந்துத் தொழிற்சாலையான சாஹிதி பார்மாவில் அணுஉலை வெடித்ததில் 6 பேர் பலியாகினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments