முகப்பு
இந்தியா

கொல்கத்தா மருத்துவர் வழக்கு: கருத்தரங்கு அறையின் கதவில் பிரச்னை.. சிபிஐ எழுப்பும் சந்தேகம்!

கொல்கத்தா மருத்துவர் வழக்கில், உடைந்த கதவுகொண்ட கருத்தரங்கு அறையில்தான் குற்றம் நடந்திருக்குமா என்று சிபிஐ கேள்வி எழுப்புகிறது.

Updated On : 23 ஆகஸ்ட் 2024, 3:52 pm IST
கொல்கத்தா கொடூரம் - Center-Center-Delhi
பகிர்:

கொல்கத்தா: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் வன்கொடுமை, கொலை வழக்கில், கதவை இணைக்கும் போல்டு உடைந்திருக்கும் கருத்தரங்கு அறையில் எவ்வாறு குற்றம் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது சிபிஐ.

மருத்துவமனையின், கருத்தரங்கு அறையின் கதவு, இணைக்கப்பட்டிருக்கும் போல்டு உடைந்து காணப்படுவதை முக்கிய ஆதாரமாக எடுத்திருக்கும் சிபிஐ, ஒருவேளை இந்த கருத்தரங்கு அறையில் குற்றம் நடந்திருந்தால், யாரேனும் ஒருவர் அறைக்கு வெளியே நின்று, யாரும் வராமல் காவல் காத்திருக்க வேண்டும் என்றும், அதனை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு உறுதி செய்யவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மருத்துவமனைக்கு உள்ளேயே இருக்கும் கருத்தரங்கு அறைக்குள், பலியான பெண் மருத்துவர் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டிருந்தும், அவரது அலறல் சப்தம் ஏன் யாருக்குமே கேட்கவில்லை என்பதுதான் சிபிஐ அதிகாரிகளின் மிகப்பெரிய கேள்வியாக தொக்கி நிற்கிறது.

Advertisement

அதாவது, கருத்தரங்கு அறைக் கதவை தாங்கிப் பிடிக்கும் போல்டு உடைந்திருப்பதன் மூலம், அறைக் கதவு முழுமையாக சாத்தப்படாது என்பது தெரிகிறது, எனவே, அதுபோன்ற ஒரு அறையில் நடந்த குற்றச்செயல் எப்படி வெளியே யாருக்குமே தெரிந்திருக்கவில்லை என்பதே கேள்வி.

தாளிட முடியாத, கதவைக்கொண்ட கருத்தரங்கு அறையில்தான் குற்றச்செயல் நடந்ததா? யாரேனும் குற்றத்துக்கு உதவினார்களா என்று ஆராயப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலியான மருத்துவர், இந்த அரங்குக்குள் அதிகாலை 2 மற்றும் 3 மணிக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த மருத்துவர், கருத்தரங்கு அறைக்குள் பெண் மருத்துவர் உறங்கிக் கொண்டிருப்பதையும் பார்த்துள்ளார்.

மருத்துவர்கள், இளநிலை பயிற்சி மருத்துவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கருத்தரங்கு அறையின் கதவு போல்டுகள் உடைந்திருந்தது அனைவருக்கும் தெரிந்த பிரச்னைதான் என்றும், அதனால்தான் அவர் உறங்கும்போது, கதவை தாழிடவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில், மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ், தொடர்ந்து எட்டாவது நாளாக விசாரணைக்கு உள்ளக்காட்டுள்ளார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட சஞ்சாய் ராய், சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி கருத்தரங்கு அறையில், பெண் மருத்துவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். மறுநாள், சஞ்சாய் ராய் கைது செய்யப்பட்டார். ஐந்தாவது நாளில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.