முகப்பு
இந்தியா

நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு ஆதரவு! யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

Updated On : 20 டிசம்பர், 2024 at 8:23 AM
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் | அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ்
பகிர்:

நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிச. 8 ஆம் தேதி வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்ட அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ், 'இது இந்துஸ்தான் (இந்தியா) என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை, பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படி இந்த நாடு செயல்படும். இதுதான் சட்டம். உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தும் நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று கூற முடியாது. பெரும்பான்மைக்கு ஏற்ப சட்டம் செயல்படுகிறது' என்று பேசியிருந்தார். இவர் பேசிய விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

நீதிபதியின் பேச்சுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சி (ஏஐஎம்ஐஎம்) தலைவர் அசாதுதீன் ஒவைசி கடும் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுதொடர்பாக கடிதம் எழுதினார். அதேபோல மாநிலங்களவையில் 55 எம்.பி.க்கள் சேர்ந்து நீதிபதி யாதவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.

அதன்படி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உள்பட 5 நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் முன்பாக ஆஜரான நீதிபதி சேகர் குமார் யாதவுக்கு, வார்த்தைகளில் கவனமாக இருக்குமாறு கொலீஜியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நீதிபதி யாதவின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்வகையில் பேசினார்.

யோகி ஆதித்யநாத் சில நாள்களுக்கு முன்பு, 'மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. யார் உண்மையைப் பேசினாலும் இவ்வாறு அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்களை பதவி நீக்கம் செய்ய அழுத்தம் கொடுப்பார்கள். ஆனால் அவர்கள் அரசியலமைப்பைப் பற்றி பேசுகிறார்கள், அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை பாருங்கள்' என்று பேசியிருந்தார்.

இதையடுத்து, நீதிபதி எஸ்.கே.யாதவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்யக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.