யுபிஎஸ்சி: குடியரசுத் தலைவரை எதன் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யலாம்?
குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் தொடர்பாக...
குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம் தொடர்பாக பின்வருமாறு காணலாம்.
குடியரசுத் தலைவரின் பதவி நீக்கம்
அரசியலமைப்பை மீறியதற்காக குடியரசுத் தலைவரை ‘பதவி நீக்கத் தீர்மானம்’ (Impeachment) மூலம் பதவியில் இருந்து நீக்கலாம். ஆனால், “அரசியலமைப்பை மீறுதல்” என்ற சொல்லுக்கு அரசியலமைப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
Advertisement
Advertisement
இந்த பதவி நீக்க குற்றச்சாட்டை நாடாளுமன்றத்தின் எந்த ஒரு அவையும் தொடங்கலாம். குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் அவையின் உறுப்பினர்களில் குறைந்தது நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் அதில் கையெழுத்திட வேண்டும். மேலும், குடியரசுத் தலைவருக்கு 14 நாட்கள் முன் அறிவிப்பு வழங்கப்பட வேண்டும்.
அந்த அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு, அது மற்றொரு அவைக்கு அனுப்பப்படும். அந்த அவை குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். விசாரணையின்போது குடியரசுத் தலைவருக்கு நேரில் ஆஜராகவும், தனது சார்பில் பிரதிநிதியை நியமிக்கவும் உரிமை உண்டு.
மற்ற அவையும் குற்றச்சாட்டுகளை ஏற்று, தனது மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றினால், அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார் என்பதாகும்.
இதனால், குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறை நாடாளுமன்றத்தில் நடைபெறும் பகுதியளவு நீதித்துறை (Quasi-Judicial) செயல்முறையாக கருதப்படுகிறது.
இந்த சூழலில் கவனிக்க வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்கள்:
நாடாளுமன்றத்தின் எந்த அவையிலான நியமன உறுப்பினர்களும் குடியரசுத் தலைவரின் பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்க முடியாது.
மாநில சட்டப்பேரவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், தில்லி மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்பார்கள். ஆனால், பதவி நீக்க நடைமுறையில் பங்கேற்க முடியாது.
Regarding the removal of the President...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.