சிந்தியா போன்றவர் கிடையாது கமல்நாத்: மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர்
கமல்நாத் சித்தாந்தம் காக்கும் காங்கிரஸ் தலைவர்: ஜீத்து பட்வாரி உறுதி
ஜோதிராதித்யா சிந்தியா போன்றவர் கமல்நாத் கிடையாது என்று மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜீத்து பட்வாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், காங்கிரசின் சித்தாந்தத்துடன் தான் கமல்நாத் எப்போதும் நிற்கிறார். இந்திரா காந்தி, அவரை, தன் மூன்றாவது மகனாகவே கருதினார். 7 ஆண்டுகள் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் முதல்வராகப் பணியாற்றியவர். அவரை முதல்வராக பணியமர்த்த கட்சிக்காரர்கள் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
கமல்நாத் சிந்தியா போன்றவர் இல்லை. கமல்நாத் சித்தாந்தம் உடைய காங்கிரஸ் தலைவர். பதவிக்காக கட்சி மாற மாட்டார். விலகுவார் என்ற எண்ணம் கூட தவறு. இவ்வாறு அவர் கூறினார். மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும் தனது மகன் நகுல்நாத் எம்.பியுடன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாகவும், கடந்த ஆண்டு இறுதியில் நடந்த பேரவைத் தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததால் ராகுல் காந்திக்கு எதிராகவும் கமல்நாத் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஊகங்களுக்கு மத்தியில் கமல்நாத் சனிக்கிழமை பிற்பகல் தேசிய தலைநகர் தில்லி சென்றுள்ளார்.
கடந்த 2020, மாா்ச் மாதம் காங்கிரஸில் இருந்து ஜோதிராதித்யா சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் விலகி பாஜகவில் சோ்ந்ததால் மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.