பெங்களூரு நகரின் அதிகரித்துவரும் தேவையை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் 10 கோடி பயணிகளை கையாளும் திறனோடு மற்றொரு பன்னாட்டு விமான நிலையம் அமைப்பது நிச்சயமென கர்நாடக உள்கட்டுமானத் துறை அமைச்சர் எம்பி பாட்டீல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
விதான செளதாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ஏறத்தாழ 4,500 முதல் 5,000 ஏக்கர் அளவிலான நிலம் முன்மொழியப்பட்டுள்ள விமான நிலையத்துக்கு தேவைப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேல்மட்டளவிலான குழு முடிவெடுக்கும் என அவர் கூறினார்.
மேலும், அவர், தற்போது மும்பை, தில்லிக்கு அடுத்த நிலையில் மூன்றாவது பரபரப்பான விமான நிலையமாக பெங்களூரு இருப்பதாகவும் 5.2 கோடி எண்ணிக்கையிலான பயணிகள் ஆண்டுதோறும் விமான நிலையத்தை பயன்படுத்துவதாகவும் 7.1 லட்சம் டன் சரக்கு கையாளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2035-ல் விமான நிலையம் அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் எனத் தெரிவித்தார்.
கனகபுரா சாலை, மைசூரு சாலை, மகத், தொட்டபல்லாபுரா, தபாஸ்பேட் மற்றும் துமகுரு ஆகிய இடங்கள் ஆலோசனையில் உள்ளதாகவும் நெடுஞ்சாலை, ரயில்பாதை, மெட்ரோ உள்ளிட்ட பல காரணிகளை இடம் தேர்வு செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கோரிக்கை வைக்க மத்திய கனரக தொழில் மற்றும் இரும்புத் துறை அமைச்சர் குமாரசாமியை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.