யுபிஎஸ்சி-யில் முறைகேடாக தேர்ச்சி பெற்றாரா ஓம் பிர்லா மகள்? குற்றச்சாட்டுகளுக்கு எதிராக வழக்கு!
அவதூறு பரப்புபவர்களுக்கு எதிராக தில்லி உயர்நீதிமன்றத்தில் அஞ்சலி பிர்லா வழக்கு..
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகளும் ஐஆர்பிஎஸ் அதிகாரியுமான அஞ்சலி பிர்லா, தில்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், எக்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் தான் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக பதிவிட்டு தனக்கும், தந்தையின் நற்பெயருக்கும் களங்கும் விளைவிக்கும் விதமாக பல்வேறு பதிவுகள் வெளியாகியுள்ளது, அதனை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இன்று விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வில் இந்திய ரயில்வே பணியாளர் சேவை அதிகாரியாக அஞ்சலி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மாடலிங் தொழிலில் பிரபலமான அஞ்சலி பிர்லா, முதல் முயற்சியிலேயெ தேர்ச்சி பெற்றது எப்படி என்று எக்ஸ் தளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், யுபிஎஸ்சி தேர்வு எழுதாமலேயே தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி அஞ்சலி பிர்லா முறைகேடாக பதவி பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, சில உண்மை அறியும் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில், யுபிஎஸ்சி இணையதளத்தில் உள்ள ஆவணங்களின்படி, முதல்நிலை தேர்வு மற்றும் நேர்க்காணலில் அஞ்சலி பிர்லா பங்கேற்றதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இணையதளத்தில் எழுந்த அவதூறுகளுக்கு எதிராக ஏற்கெனவே, மகாராஷ்டிர சைபர் குற்றப்பரிவு தலைவரிடன் அஞ்சலி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், அஞ்சலி குறித்து அவதூறாக பதிவிட்ட எக்ஸ் ஐடிக்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புணே பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கர் மீதான முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, தொடர்ச்சியாக பல்வேறு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசுப் பணியாளர்கள் மீது முறைகேடு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.