கர்நாடகாவில் 23 வயது இளைஞர் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். வன்கொடுமைக்கு ஆளானபோது அந்த சிறுமிக்கு 16 வயது 9 மாதங்களே ஆகியிருந்தது.
தற்போது, 18 வயது நிரம்பிய வன்கொடுமைக்கு ஆளானப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள சிறையில் இருக்கும் அந்த இளைஞருக்கு 15 நாள் ஜாமீன் வழங்கி கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு குடும்பத்தாரின் சம்மதத்துடனும், முக்கியமாக அந்தப் பெண்ணின் சம்மதத்துடனும் இந்தத் திருமணம் நடக்கவிருப்பதாகவும், சமீபத்தில் 18 வயது தொடங்கிய அந்தப் பெண் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மரபணு பரிசோதனையின் மூலம் வன்கொடுமை செய்த இளைஞரே அந்தக் குழந்தைக்குத் தந்தை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை திருமணம் முடிந்து வருகிற ஜூலை 3 அன்று மீண்டும் சிறைக்குத் திரும்ப உத்தரவிட்ட நீதிமன்றம், ஜூலை 4-ல் நடக்கும் அடுத்த விசாரணையில் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணத்தை நடத்துவதால் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை வைத்ததால், இடைக்கால உத்தரவாக 15 நாள் ஜாமீன் வழங்கி கடந்த சனிக்கிழமை (ஜூன் 15) அன்று நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டார்.
மைசூர் மாவட்டத்தைச் சேர்ந்த குற்றவாளி, கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 16 வயதாகியிருந்த சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக சிறுமியின் தாய் கொடுத்தப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 (2) 5 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 6, 2012-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சிறுவயதில் தாயானப் பெண்ணுக்கும், அந்தக் குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாமல் ஆதரவளிக்க இந்தத் திருமணம் அவசியமானது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.