கேரளத்தில் அங்கன்வாடி மாடியில் இருந்து விழுந்த சிறுமி!
கேரளத்தில் அங்கன்வாடி மாடியில் இருந்து கீழே விழுந்த சிறுமி படுகாயமடைந்தார்.
கேரளத்தில் அங்கன்வாடி மையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுமி தலையில் பலத்த காயமடைந்தார்.
கேரளத்தில் மலை மாவட்டமான இடுக்கி அடிமாலியின் கல்லார் பகுதியில் அமைந்துள்ள ஒரு அங்கன்வாடி மையத்தின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி அருகில் உள்ள ஓடையில் விழுந்த 4 வயது சிறுமி தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை பிற்பகல் காயமடைந்த சிறுமி முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
Advertisement
Advertisement
ஆசிரியர் குழந்தைகளுக்கு உணவு கொடுத்துவிட்டு இரண்டாவது மாடியில் இருந்து கீழே அழைத்துச் சென்றபோது, சிறுமி மாடியின் 20 அடி உயரத்தில் இருந்து கட்டிடத்தின் பின்னால் ஓடும் ஓடையில் விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “இரண்டாவது மாடியில் பாதுகாப்பான பக்கச்சுவர் இல்லை. மேலும், இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டாவது தளத்தில் அங்கன்வாடி செயல்படுவது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக புகார் தெரிவித்தும், ஊராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை” என்றனர்.
இதுகுறித்து கேள்விப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “காயமடைந்த சிறுமிக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கன்வாடி கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஏற்கனவே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.