கலால் வரிக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி தொடர்பாக தில்லி அமைச்சர் கைலாஷ் கெலாட் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்டு ஏப்ரல் 1 வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளார்.
இந்த நிலையில், நஜாப்கரைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், தில்லி போக்குவரத்து மற்றும் சட்ட அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட்டுக்கு அமலாக்கத்துறை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
இதற்கு முன்னதாக, கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், கவிதா ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.