சர்வாதிகார அரசை அகற்றுவதே குறிக்கோள்: காங்கிரஸ்
"பாஜகவுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைதான் வேலை செய்கிறார்கள்"
மத்தியில் இருந்து சர்வாதிகார அரசை அகற்றுவதே எங்களின் குறிக்கோள் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு கே.சி.வேணுகோபால் பேட்டியளித்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது:
Advertisement
Advertisement
“எங்களின் மதிப்பீட்டின்படி இந்தியா கூட்டணி குறைந்தபட்சம் 300 தொகுதிகளில் வெற்றி பெறும். தென்னிந்தியாவில் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். வட இந்தியாவில் பாஜக பெரும் வெற்றிபெறும் அல்லது கடந்த முறை பெற்ற அதே அளவிலான தொகுதிகளை கைப்பற்றும் என்று பலரும் கூறினார்கள். ஆனால், நாங்கள் எடுத்த கள நிலவரத்தின்படி ராஜஸ்தான், ஹரியாணா, உத்தர பிரதேசம், தில்லி, பிகார், மகாராஷ்டிர உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி அதிகளவிலான தொகுதிகளை கைப்பற்றும். இந்தியா கூட்டணியின் வெற்றி பிரகாசமாக இருக்கிறது.
பிரதமர் அந்தஸ்துள்ள ஒருவரிடமிருந்து இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துகளை நாங்கள் ஒருபோதும் கேட்டதில்லை. அவநம்பிக்கையுள்ள ஒருவரால் மட்டுமே இதுபோன்ற கருத்துகளை பேச முடியும். அவர் பொய் கூறுகிறார். நாட்டை தவறான பாதையில் வழிநடத்த முயற்சிக்கிறார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற 400 எம்பிக்கள் தேவை என்று பாஜக எம்பிக்கள் கூறுகிறார்கள். பாஜகவினர் எதேச்சதிகார அரசாங்கத்தை விரும்புகிறார்கள். ஜனநாயகத்தை விரும்பவில்லை. எங்களின் தேர்தல் அறிக்கை குறித்து தவறான விமர்சனத்தை முன்வைத்தாலும், விளம்பரம் கொடுத்ததற்கு பிரதமருக்கு நன்றி.
நாங்கள் ரேபரேலியில் பெரும் வெற்றியை பதிவு செய்வோம். அமேதியை மீண்டும் கைப்பற்றுவோம். உபியில் குறைந்தபட்சம் பாதி தொகுதிகளையாவது கைப்பற்றுவோம்.
அடுத்த இரண்டு கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்ற சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். ஹரியாணா, பஞ்சாபில் உள்ள விவசாய சமூகத்தினர் இந்த அரசின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த மாநிலங்களில் பெரும்பான்மை இடங்களை பெறுவோம்.
ராஜஸ்தானில் பிரதமர் பேசியதற்கு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த பிறகும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிக் கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. அவர்கள் அனைத்து விதிமுறைகளையும் மீற சிறப்பு சலுகை உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏதாவது கூறினால், நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.
மத்தியில் இருக்கு சர்வாதிகார, ஜனநாயக விரோத அரசை அகற்ற வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். நாட்டின் ஜனநாயகத்துக்கும் இது மிக அவசியம். பாஜகவுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறைதான் வேலை செய்கிறார்கள். தேர்தல் ஆணையமும் நடுநிலை வகிக்கவில்லை.” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.