எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள்: கேஜரிவால்
எனது வயதான பெற்றோரை விட்டுவிடுங்கள் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு தொடா்பாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் பெற்றோரிடம் தில்லி காவல் துறையினர் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இதனையடுத்து, அரவிந்த் கேஜரிவால் இந்த விவகாரத்தில் என்னுடைய வயதான பெற்றோரை துன்புறுத்த வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எக்ஸ் தளத்தில் விடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெரிவித்திருப்பதாவது.
“பிரதமர் மோடி அவர்களே, எங்கள் கட்சியின் எம்எல்ஏக்களை ஒருவர் பின் ஒருவராக கைது செய்தீர்கள். பின்னர் எங்களது அமைச்சர்களை கைது செய்ய ஆரம்பித்தீர்கள், அதற்கும் நான் கலங்கவில்லை. பிறகு என்னை கைது செய்து திகாரில் சிறையில் அடைத்து அழுத்தம் கொடுத்தீர்கள்.
ஆனால், தற்போது என் வயதான பெற்றோரை குறிவைக்கிறீர்கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. என் தந்தைக்கு 85 வயதாகிறது, அவருக்கு சரியாக காது கேட்காது.
எனது பெற்றோர் ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா, உங்கள் சண்டை என்னுடன்தான், அவர்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்.
எனது பெற்றோரை விட்டுவிடுங்கள், கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.