திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும்: அரவிந்த் கேஜரிவால்
திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சரை பிரதமர் பதவி நீக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தது குறித்து...
திறமையற்ற, பயனற்ற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பிரதமர் நரேந்திர மோடி பதவி நீக்க வேண்டும் என்று தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கு முன்னதாகவே அந்த வினாத்தாள் கசிந்தது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்தத் தேர்வினை ரத்து செய்து, மறுதேர்வு வரும் ஜூன் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.
மேலும், 18.5 லட்சம் மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ தேர்வில் ஒரு வாரமாக, தவறான மதிப்பெண் வழங்குதல், மதிப்பீட்டுக் குளறுபடிகள் குறித்த புகார்கள் எழுந்துகொண்டுள்ளன.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக அரவிந்த் கேஜரிவால் வெளியிட்டுள்ள விடியோவில் பேசியதாவது:
சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் உள்ள மாபெரும் ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தச் நிகழ்வுக்குப் பிறகாவது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை, பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
ஏனெனில், தர்மேந்திர பிரதான் இந்த நாட்டின் கல்வி அமைச்சராக ஒரு நாள், ஒரு நொடி கூட இருப்பதற்குத் தகுதியற்றவர். முதலில் நீட் தேர்வு முறைகேடு நடந்தது, இப்போது சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறையில் இவ்வளவு பெரிய முறைகேடு வெளிவந்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான 12 ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கும், பெரும் மனச்சோர்விற்கும் ஆளாகியுள்ளனர். மேலும் அவர்களது பெற்றோரும் ஆழ்ந்த மனச்சோர்வில் உள்ளனர்.
எனவே, மறுமதிப்பீட்டுக் கட்டணம் உடனடியாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். திரையில் மதிப்பிடுதல் செயல்முறை (ஓஎஸ்எம்) முற்றிலுமாக ரத்து செய்யப்பட வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு தரப்பிலிருந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.