மத்திய கல்வி அமைச்சரைப் பதவி விலக, கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வலியுறுத்தல்!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வலியுறுத்தியது தொடர்பாக...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சி வெள்ளிக்கிழமை (மே 22) வலியுறுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி ஒருவரின் விமர்சனத்தால் கோபமடைந்த இளைஞர்கள், அந்த வார்த்தையையே தங்களின் அடையாளமாக மாற்றி, கடந்த மே 16 ஆம் தேதி அபிஜித் திப்கே என்ற டிஜிட்டல் கிரியேட்டர் தலைமையில் 'கரப்பான்பூச்சி மக்கள் கட்சி' என்ற நையாண்டி பக்கத்தை முகநூல் மற்றும் எக்ஸ் தளங்களில் தொடங்கினர்.
தொடங்கிய சில நாள்களிலேயே, அதன் பின்தொடர்வோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியது. இதனையடுத்து, கரப்பான் பூச்சி மக்கள் கட்சியின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தை மத்திய அரசு முடக்கியது.
Advertisement
Advertisement
முடக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது என்ற அடைமொழியுடன் ‘காக்ரோச் இஸ் பேக்’ பெயரில் புதியதொரு எக்ஸ் கணக்கு தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், நீட்தேர்வில் வினாத்தாள் கசிந்தது குறித்து அபிஜித் திப்கே பேசிய விடியோ ஒன்று கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் புதிய எக்ஸ் பக்கத்தில் வெளியாகியுள்ளது. அதில் அவர் தெரிவித்ததாவது:
கரப்பான்பூச்சிகளே எப்படி இருக்கிறீர்கள்? இணையத்தில் நாம் சிறப்பாகச் செயல்படுவதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், தற்போது நாம் உண்மையான வேலையைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, இன்று நாம் வலியுறுத்துகிறோம்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. நீட் மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஆகையால், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் எனத் தெரிவித்தார்.