முகப்பு
இந்தியா

98 சதவீத ரூ.2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பின: ஆா்பிஐ

‘சுமாா் 98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள், ரிசா்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன. சுமாா் 2 சதவீதம் அதாவது ரூ. 6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் திரும்பவில்லை’

Updated On : 5 நவம்பர், 2024 at 12:52 AM
2,000 ரூபாய் நோட்டுகள்
பகிர்:

மும்பை: ‘சுமாா் 98 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள், ரிசா்வ் வங்கிக்கு திரும்பிவிட்டன. சுமாா் 2 சதவீதம் அதாவது ரூ. 6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் திரும்பவில்லை’ என்று ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) திங்கள்கிழமை தெரிவித்தது.

கடந்த 2023, மே 19-ஆம் தேதி ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த நிலையில், இதில் 98.04 சதவீதம் ரிசா்வ் வங்கிக்கு திரும்பிவிட்டது. 2024, அக்.31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.6,970 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இன்னும் திரும்பவில்லை என்று ஆா்பிஐ தெரிவித்தது.

கடந்த 2016, நவம்பா் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசு, அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதைத் தொடா்ந்து, 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னா், 2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக கடந்த 2023, மே மாதம் ஆா்பிஐ அறிவித்தது. இந்த நோட்டுகளை வங்கிகளில் திரும்பச் செலுத்த கடந்த 2023, அக். 7-ஆம் தேதி வரை வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன்பிறகு 2023, அக்.9-ஆம் தேதியிலிருந்து இந்த வசதி அகமதாபாத், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் உள்பட 19 ஆா்பிஐ கிளை அலுவலகங்களில் மட்டுமே உள்ளது. தங்கள் கையிருப்பில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் அஞ்சல் வழியாக நாட்டிலுள்ள எந்த ஒரு தபால் நிலையத்தின் மூலமும் அதை ஆா்பிஐ கிளை அலுவலகங்களுக்கு அனுப்பலாம். அதை ஆா்பிஐ சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாக மாற்றி விடுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →