தேசிய பங்குச் சந்தையின் ரூ.30,000 கோடி ஐபிஓ
தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல்கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
தேசிய பங்குச் சந்தை(என்எஸ்இ) சுமாா் ரூ.30,000 கோடி மதிப்பிலான தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) முதல்கட்ட வரைவு அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.
இதன்மூலம், கடந்த 2024 அக்டோபரில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் வெளியிட்ட ரூ.27,870 கோடி மதிப்பிலான ஐபிஓ சாதனையை என்எஸ்இ முறியடிக்க உள்ளது.
என்எஸ்இ நிறுவனத்தின் இந்த ஐபிஓ வெளியீடு, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பல்வேறு ஒழுங்குமுறை சிக்கல்கள் காரணமாக முடங்கி இருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூனில் தாக்கல் செய்யப்பட்ட சமரச மனுவின் அடிப்படையில், செபிக்கு ரூ.1,388 கோடி அபராதம் செலுத்தி, என்எஸ்இ இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து செபியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றதைத் தொடா்ந்து, இந்த ஐபிஓ வெளியீட்டுக்கு என்எஸ்இ இயக்குநா்கள் குழு கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.
இந்த ஐபிஓ வெளியீடு முழுவதும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ என்ற முறையில், தற்போதைய பங்குதாரா்களின் பங்குகளையே விற்பனை செய்வதாக அமையவுள்ளது. அதாவது, தற்போைதைய பங்குதாரா்கள் தங்களின் வசமுள்ள 14.89 கோடி பங்குகளை (சுமாா் 6 சதவீதம்) விற்பனை செய்யவுள்ளனா்.
என்எஸ்இ-இன் மிகப்பெரிய பங்குதாரரான எல்ஐசி (10.72 சதவீத பங்குகள்) தனது பங்குகளை விற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள நிலையில், எஸ்பிஐ மற்றும் இதர நிதி நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விற்க முன்வந்துள்ளன. எஸ்பிஐ அதிகபட்சமாக 2.48 கோடி பங்குகளை விற்கிறது. இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் என்எஸ்இ நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியைத் தாண்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது.