முகப்பு
இந்தியா

ராகுல் மீதான அவதூறு வழக்கு: அக்.9-க்கு ஒத்திவைப்பு!

வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

Updated On : 1 அக்டோபர், 2024 at 11:08 AM
ராகுல் காந்தி
பகிர்:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமித் ஷா குறித்து சர்ச்சைக் கருத்தை தெரிவித்ததாக ராகுல் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மீண்டும் ஒத்திவைப்பு

இந்த வழக்கில் மனுதாரரும் உள்ளூர் பாஜக தலைவருமான விஜய் மிஸ்ராவின் வழக்குரைஞருமான சந்தோஷ் குமார் பாண்டேவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ராகுல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக செப். 21ஆம் தேதியும் பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த சுகாதார முகாம் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அக்டோபர் 9ஆம் தேதிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவதூறு வழக்கின் பின்னணி

2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சர்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்தார். இதனை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சாா்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூா் எம்.பி. எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தாா். இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

அதைத் தொடர்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →