சாத்தான்குளம் கொலை வழக்கு: தண்டிக்கப்பட்டோருக்கு சிறையில் சலுகை கிடையாது! மதுரை மாவட்ட நீதிமன்றம்
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தண்டனை பெற்ற காவலா்களுக்கு சிறையில் சலுகை தர முடியாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், தண்டனை பெற்ற காவலா்களுக்கு சிறையில் சலுகை தர முடியாது என மதுரை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா் ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ் (31). இவா்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பொது முடக்கத்தின் போது, அனுமதித்த நேரத்தைவிடக் கூடுதலாக தங்களது
கைப்பேசிக் கடையைத் திறந்து வைத்திருந்தனா். இதன் காரணமாக, சாத்தான்குளம் போலீஸாா் இவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தாக்கினா். இதில் பலத்த காயமடைந்த இருவரும் உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் அப்போதைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, காவலா்கள் முருகன், முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் ஆகிய 10 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் உதவி ஆய்வாளா் பால்துரை உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இதையடுத்து, அவா் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாா்.
பின்னா், இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மதுரை மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் காவலா்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா் ரகு கணேஷ், காவலா்கள் செல்லதுரை, சாமிதுரை, வெயிலுமுத்து ஆகி 5 பேரும் தங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை, கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜான் சுந்தா்லால் சுரேஷ் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: குற்றத்தின் கொடூரத் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிறையில் அவா்களுக்கு எந்தவித சலுகைகளும் வழங்கப்படாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.