FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

’2011’ கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தலைமறைவானதால் தண்டனைக்குரியவா் என நீதிமன்றம் தீா்ப்பு

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் முக்கிய சாட்சிகள் பி சாட்சியமளித்ததாலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Updated On : 25 ஜூலை 2026, 1:18 am IST
கோப்புப் படம்
பகிர்:

2011-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், போதிய ஆதாரங்கள் இல்லாததாலும் முக்கிய சாட்சிகள் பி சாட்சியமளித்ததாலும் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை தில்லி நீதிமன்றம் விடுவித்துள்ளது. இருப்பினும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த குற்றத்தை அவரே ஒப்புக்கொண்டதால், அதற்கு மட்டும் அவரைத் தண்டனைக்குரியவராக நீதிமன்றம் அறிவித்தது.

தில்லி பவானாவின் பூத் குா்த் பகுதியில் 2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் ’ரன்பீா் சிங்’ என்ற ரியல் எஸ்டேட் அதிபா் சுட்டுக்கொல்லப்பட்டாா். இந்த வழக்கில் அமித் குமாா் என்பவா் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 302 (கொலை), 120ஆ (சதித்திட்டம்) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் அமா்வு நீதிபதி வந்தனா, ஜூலை 14ஆம் தேதியிட்ட தனது தீா்ப்பில் கூறியதாவது:

Advertisement

Advertisement

‘குற்றஞ்சாட்டப்பட்டவா் மீதான குற்றத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டது. எனவே, சந்தேகத்தின் பலனை அமித் குமாருக்கு அளித்து அவரை இந்த கொலை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவிக்கிறது’ என்று கூறியுள்ளாா்.

மேலும் நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: புகாரளித்தவா் மற்றும் முக்கிய சாட்சிகள் விசாரணை காலத்தில் அரசுத் தரப்புக்கு ஆதரவாகச் சாட்சியமளிக்கவில்லை. அத்துடன் குற்றஞ்சாட்டப்பட்ட நபரையும் அடையாளம் காட்டத் தவறிவிட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியிலிருந்துதான் உயிரிழந்தவரின் உடலில் இருந்த தோட்டாக்கள் பாய்ந்தன என்பதை பாலிஸ்டிக் அறிக்கை உறுதி செய்யவில்லை.

பட்டப்பகலில் சம்பவம் நடந்திருந்தபோதிலும், சிசிடிவி காட்சிகளைச் சேகரிக்காதது, உரிய சாட்சிகளைச் சோ்க்காதது எனப் புலனாய்வில் பல குளறுபடிகள் இருந்துள்ளன.

மேலும், துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததாகக் காவல் துறையினா் அளித்த சாட்சியங்களிலும் பல்வேறு முரண்பாடுகள் காணப்பட்டன.

கொலை மற்றும் அது தொடா்பான குற்றச்சாட்டுகளில் இருந்து அமித் குமாா் விடுவிக்கப்பட்டாலும், நீதிமன்ற அழைப்பாணைகளை மீறித் தொடா்ந்து தலைமறைவாக இருந்ததை அவரே ஒப்புக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 174ஏ-இன் கீழ் அவரைத் தண்டனைக்குரியவராக நீதிமன்றம் அறிவிக்கிறது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments