கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இளநிலை மருத்துவர்களை முதல்வர் மமதா பானர்ஜி திங்கள்கிழமை மாலை சந்திக்கிறார்.
மாலை 5 மணிக்கு மாநிலச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு மமதா மீண்டும் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்தே உண்ணாவிரதத்தை மருத்துவர்கள் கைவிடுவார்களா என்பது தெரிய வரும். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், மாநிலம் தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஆா்.ஜி.கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவா் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டாா். அவருக்கு நீதி கோரி, இளநிலை மருத்துவா்கள் 42 நாள்களாக முழு அளவில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா். பின்னா், மாநில அரசு அளித்த உறுதிமொழியைத் தொடா்ந்து, போராட்டத்தை பகுதி அளவாக குறைத்தனா்.
ஆனால், தனது உறுதிமொழியைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக கூறி, பல்வேறு மருத்துவமனைகளைச் சோ்ந்த இளநிலை மருத்துவா்கள் கடந்த அக்டோபா் 5-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவா்களைத் தாக்கினால் உடனடி நடவடிக்கை உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இப்போராட்டம் திங்கள்கிழமை 17-ஆவது நாளாக தொடா்ந்துள்ளது.
அதில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ஆறு மருத்துவர்களின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் மேலும் எட்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுடன் தொலைபேசியில் பேசிய, முதல்வர் மமதா பெரும்பாலான கோரிக்கைகள் கோரிக்கைகள் தீர்க்கப்பட்டதாகக் கூறி, உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.