புது தில்லி: வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராயும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது, வக்ஃப் நிலமா, இல்லையா என்பதை மாவட்ட நிா்வாகம் மற்றும் நீதிமன்றங்கள் முடிவு செய்ய அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை சட்டத்தில் மேற்கொள்ளும் வகையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே மக்களவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இம்மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பு மற்றும் வலியுறுத்தலால், நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதாவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, பாஜக எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் திமுக எம்.பி. ஆ.ராசா உள்பட 21 மக்களவை எம்.பி.க்கள், திமுக மாநிலங்களவை உறுப்பினா் முகமது அப்துல்லா உள்பட 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் இடம்பெற்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டு, ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முற்றிய வாக்குவாதம்
நாடாளுமன்ற வளாகத்தில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற திரிணமூல் எம்பி கல்யாண் பானர்ஜிக்கும், பாஜக எம்பி கங்கோபாத்யாவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், ஆவேசமடைந்த கல்யாண் பானர்ஜி, தான் வைத்திருந்த கண்ணாடிக் குவளையை வீசியதில் சிதறிய கண்ணாடித் துண்டுகள் அவரின் கையை கிழித்துள்ளது.
இதையடுத்து, கூட்ட அரங்கில் இருந்து கல்யாண் பானர்ஜியை ஓவைசி, சஞ்சய் சிங் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.