நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை: திரிணமூல் அறிவிப்பு!
காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை என திரிணமூல் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி தெரிவித்தது பற்றி...
காங்கிரஸ் கட்சியுடன் இணையவில்லை என திரிணமூல் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி சனிக்கிழமை (ஜூன் 13) தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன.
சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) கடிதம் கொடுத்திருந்தனர். இதையடுத்து, திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள் மூன்று பேர் ராஜிநாமா செய்ததோடு கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
Advertisement
Advertisement
இதனால் மாநிலங்களவையிலும் கட்சி பிளவுபட்டு மமதா ஆதரவு எம்.பி.க்கள், அதிருப்தி எம்.பி.க்கள் என இரண்டு அணிகளாகப் பிரிந்தனர். இந்த நிலையில், திரிணமூல் கட்சியும் காங்கிரஸும் இணையப்போவதாக செய்திகள் பரவின.
இதுகுறித்து திரிணமூல் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி பேசியதாவது:
நாங்கள் காங்கிரஸுடன் இணையவில்லை.
அவர்கள் (அதிருப்தி எம்எல்ஏக்கள், எம்பிக்கள்) என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அவர்கள் பாஜகவின் பாதுகாப்பில் வாழ வேண்டியிருக்கும். இதெல்லாம் ஒரு சூழ்ச்சி. தங்கள் தொகுதிகளின் வளர்ச்சியை இதற்குக் காரணமாகக் கூறுகிறார்கள். ஆனால் தங்கள் தொகுதிகளுக்குச் செல்லக்கூட முடியாதவர்கள், அதனால் என்ன வேலையைச் செய்வார்கள்?
மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் முடிந்துவிட்டது. கடந்த ஒரு மாதத்தில் என்ன வளர்ச்சி ஏற்பட்டுள்ளது? பாஜக எங்களைத் துன்புறுத்துகிறது, காவல்துறை எங்களைத் துன்புறுத்துகிறது. மேற்கு வங்கத்தில் எந்தவொரு எதிர்க்கட்சியும் நாங்கள் சந்திப்பதைப் போன்ற பிரச்னைகளை இதற்கு முன் சந்தித்ததில்லை. பாஜகவுக்குச் செல்லும் 19 எம்.பி.க்களை அக்கட்சி ஏற்றுக்கொள்ளாது என்று தெரிவித்தார்.
முன்னதாக காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸும் இணைவதாகப் பரவிய செய்தியை வதந்தி என்று கூறி, அதை மறுத்தது குறிப்பிடத்தக்கது.