கட்சியைவிட்டு விலகுகிறேனா? திரிணமூல் எம்.பி. விளக்கம்!
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா அக்கட்சியில் நீடிப்பது குறித்து பேசியது தொடர்பாக...
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா அக்கட்சியில் நீடிப்பதாகவும், கடினமான காலங்களில் மமதா பானர்ஜியை விட்டு வேறு கட்சியில் இணையும் நோக்கம் இல்லை என்றும் வியாழக்கிழமை (ஜூன் 10) பேசியுள்ளார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் மட்டுமே வென்றதால், ஆட்சியை இழந்தது.
சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவர் (எதிர்க்கட்சித் தலைவர்), துணைத் தலைவர், தலைமை கொறடா நியமனத்தில் மமதா பானர்ஜி முடிவுக்கு எதிராக கட்சியில் குரலெழுப்பப்பட்டது. இதனால் கட்சி இரண்டு அணிகளாகப் பிரிந்தன. இதனைத் தொடர்ந்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதபிரத பானர்ஜியை சட்டப்பேரவை திரிணமூல் காங்கிரஸ் குழுத் தலைவராக நியமிக்க 58 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
சட்டப்பேரவையைத் தொடர்ந்து மக்களவையிலும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளன. அக்கட்சியைச் சேர்ந்த 28 எம்.பி.க்களில் 20 எம்.பி.க்கள் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக மக்களவைத் தலைவர் ஓம் பிா்லாவிடம் திங்கள்கிழமை (ஜூன் 8) கடிதம் கொடுத்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி.க்கள். சுகேந்து சேகர் ராய், சுஷ்மிதா தேவ், பிரகாஷ் சிக் பராய்க் ஆகியோர் தங்களுடைய பதவியை ராஜிநாமா செய்தனர். இந்த நிலையில், மேலும் சில எம்.பி.க்கள் ராஜிநாமா செய்யப்போவதாக வதந்திகள் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்து சத்ருகன் சின்ஹா, பேசியதாவது:
மமதா பானர்ஜியின் இந்தக் கடிமான நேரத்தில் நான் அவரைக் கைவிட மாட்டேன். பாட்னா தேர்தலில் தோல்வியடைந்து நான் கடினமான சூழலை எதிர்கொண்டபோது, அவர் எனக்குத் துணையாக நின்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கிளர்ச்சிக் குழுவில் சேர என்னை அழைத்தவர்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆனால், இப்போது நான் மமதா பானர்ஜியின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே எனது கொள்கை நிலைப்பாடு. தற்போதைக்கு, நான் எனது பாதையை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று தெரிவித்தார்.