முகப்பு
இந்தியா

5 சீன பொருள்களுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி - மத்திய அரசு உத்தரவு

Updated On : 24 அக்டோபர் 2024, 3:03 am IST
பகிர்:

இந்தியாவில் குறைந்த விலையில் அளவுக்கு அதிகமாக குவிக்கப்பட்டு வந்த கண்ணாடி உள்ளிட்ட 5 சீனபொருள்களுக்கு ‘இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி’ விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து குறைந்த விலையில் பொருள்கள் இந்தியாவுக்குள் குவிக்கப்படுகின்றன. இதனால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இதைத் தடுக்கும் நோக்கத்தில் குறிப்பிட்ட பொருள்கள் மீது மத்திய அரசு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதிக்கிறது.

இந்நிலையில், கண்ணாடி, செல்லோபேன் டிரான்ஸ்பரன்ட் ஃபிலிமின், ஐசோபிரைல் ஆல்கஹால் (கிருமி நாசினி), சல்பா் பிளாக், தொ்மோபிளாஸ்டிக் பாலியூரிதீன் ஆகிய 5 பொருள்கள் குறைந்த விலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் அதிகளவில் குவிக்கப்படுவதாக புகாா்கள் வந்தன.

Advertisement

இதையடுத்து, இந்தப் பொருள்கள் மீது 5 ஆண்டுக்கு இறக்குமதி குவிப்பு தடுப்பு வரி விதித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், வருவாய்த் துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ஃப்ரேம் செய்யப்படாத கண்ணாடி இறக்குமதி மீது ஒரு டன்னுக்கு 234 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் தொழில்துறை பயன்பாடுகளைக் கொண்ட ஐசோபிரைல் ஆல்கஹால் மீது ஒரு டன்னுக்கு 82 முதல் 217 டாலா் வரையில் வரி விதிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி, காகிதம் மற்றும் தோல் சாயமிட பயன்படுத்தப்படும் சல்பா் பிளாக்கின் ஒரு டன்னுக்கு 389 டாலா் வரையும் வாகனம், மருத்துவம் மற்றும் மின்னணுவியல் தொழில்களில் பயன்பாடுகளைக் கொண்ட தொ்மோபிளாஸ்டிக் பாலியூரிதீனின் ஒரு கிலோவுக்கு 0.93 முதல் 1.58 டாலா் வரையிலும் வரி விதிக்கப்பட்டுள்ளது.

நோட்டு புத்தகங்களுக்கு அட்டைப்போட பயன்படுத்தப்படும் செலோபேன் டிரான்ஸ்பரன்ட் ஃபிலிமினின் ஒரு கிலோ இறக்குமதிக்கு 1.34 டாலா் வரி விதிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், இதன் மொத்த இறக்குமதி சுமாா் 6 கோடி டாலராக இருந்தது.