நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணைய வழியே பதிவேற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரிய இயக்குநா் சாம்பு சரண் குமாா், அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கை தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுவது அவசியம். நீட் தகுதித்தோ்வு அடிப்படையிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படையிலுமே மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும். அதன்படி, நிகழாண்டில் அனுமதிக்கப்பட்ட மாணவா்களின் விவரங்கள், மதிப்பெண் விவரம், இடஒதுக்கீடு விவரம், கட்டண விவரம் உள்ளிட்டவற்றை என்எம்சி இணையப் பக்கத்தில் நவம்வா் 8-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.