முகப்பு
இந்தியா

இட ஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர காங்கிரஸ் முயல்கிறது: ராகுலுக்கு எதிராக வலுக்கும் எதிர்ப்புகள்

பகுஜன் சமாஜவாதி மற்றும் லோக் ஜனசக்தி கட்சியினர் ராகுல் காந்தி மீது குற்றச்சாட்டு

Updated On : 10 செப்டம்பர், 2024 at 4:54 PM
வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி
பகிர்:
Updated On : 10 செப்டம்பர், 2024 at 4:28 PM

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராகுல் காந்தி செயல்படுவதாக பகுஜன் சமாஜவாதி தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சாதி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். மேலும் இந்தியாவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக-பொருளாதார நிலையை காங்கிரஸ் கட்சி அறிய விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் இவ்விரண்டு வாதங்களுக்கும் எதிராக எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

Advertisement

Updated On : 10 செப்டம்பர், 2024 at 4:47 PM

ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக, பகுஜன் சமாஜவாதி கட்சித் தலைவர் மாயாவதி, தனது எக்ஸ் பக்கத்தில் ``காங்கிரஸ் கட்சி மத்தியில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தபோதுகூட, இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. ஆனால், இப்போது இந்தப் பிரச்னையைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்று கட்சி கனவு காண்கிறது.

அவர்களுடைய இந்த நாடகத்தில் கவனமாக இருங்கள். எதிர்காலத்தில் அவர்களால் ஒருபோதும் சாதி கணக்கெடுப்பை நடத்த முடியாது. காங்கிரஸ் பல ஆண்டுகளாக தங்கள் இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவர சதி செய்து வருகிறது என்பதை இது தெளிவுபடுத்துகிறது’’ என்று கூறியுள்ளார்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 4:47 PM

இதனைத் தொடர்ந்து, லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சிராக் பாஸ்வான், ``டாக்டர் அம்பேத்கர் வழங்கிய இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதை காங்கிரஸ் விரும்புகிறது; ஆனால், இது அவர்களின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். அரசியலமைப்பு முறையை சுமுகமாக தொடர, இடஒதுக்கீடு என்பது அவசியம்.

மத்தியில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சியால் சாதி கணக்கெடுப்பை நடத்தவோ அல்லது ஓபிசி இடஒதுக்கீட்டை செயல்படுத்தவோ முடியவில்லை. காங்கிரஸின் சிந்தனை ஆரம்பத்தில் இருந்தே இடஒதுக்கீட்டிற்கு எதிரானது என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

வெளிநாட்டு மண்ணில் நாட்டின் பிம்பத்தை கெடுப்பது தேச விரோத செயலாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Updated On : 10 செப்டம்பர், 2024 at 4:49 PM

இந்த நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பை தொடர்ந்து வலியுறுத்தி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வாஷிங்டன் டிசியில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இப்போது தடுத்து நிறுத்த முடியாத விஷயமாக மாறியுள்ளது.

இந்தியாவின் முக்கிய நிறுவன அமைப்பில் - பொருளாதாரம், அரசு நிர்வாகம், கல்வி ஆகிய நிறுவன அமைப்புகளில், நம் நாட்டின் மக்கள்தொகையில் 90 சதவிகிதத்தினருக்கு அர்த்தமுள்ள விதத்தில் பிரதிநிதித்துவம் இருக்கிறதா என்கிற முக்கிய கேள்விக்கு விடை தெரிய வேண்டும். இதற்கு ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரம், நீதி மற்றும் நியாயம் தொடர்பான விவகாரம். பொருளாதார கணக்கெடுப்பு, நிறுவன அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய கணக்கெடுப்புடன், விரிவான ஜாதி வாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும். மாறாக வேறு எவ்வித கணக்கெடுப்புகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.