எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!
சிபிஐ இயக்குநர் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம்...
புது தில்லி : சிபிஐ இயக்குநர் தேர்ந்தெடுப்பு விவகாரத்தில் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவான சிபிஐ-இன் அடுத்த தலைமை இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான குழுவின் கூட்டம் இன்று (மே 12) கூடியது.
சிபிஐ-இன் தற்போதைய இயக்குநரின் பதவி மே 24-ஆம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை உள்ளடக்கிய இந்தக் குழு, சிபிஐ-இன் அடுத்த தலைமை இயக்குநரைத் தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் இல்லத்தில் இன்று நடத்தியது.
Advertisement
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் என்னென்ன விவாதிக்கப்பட்டது என்பதைப் பற்றிய விவரம் எதுவும் வெளியாகாத நிலையில், ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பின் ராகுல் காந்தி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று (மே 12) இரவில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் : “எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை. ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்காக நான் எனது அரசமைப்பு கடமையை விட்டுக்கொடுக்கலாகாது.
சிபிஐ இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் எனது கடும் அதிருப்தியை நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு அந்தக் கடிதத்தின் நகலையும் பதிவிட்டுள்ளார்.