முகப்பு
இந்தியா

காய்ச்சலுக்கு மருத்துவமனைக்குச் சென்ற சிறுவன் பலி! நடந்தது என்ன?

மருத்துவரின் அலட்சியப்போக்கால் ஏழு வயது சிறுவன் பலியான பரிதாபம்..

Updated On : 28 செப்டம்பர், 2024 at 1:45 PM
சிறுவன்பலி - DIN
பகிர்:

கர்நாடகத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்குப் பின் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த சிறுவன் அஜ்ஜம்புர நகருக்கு அருகிலுள்ள கெஞ்சபுரா கிராமத்தைச் சேர்ந்த சோனேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சோனேஷின் தந்தை அசோக் அஜ்ஜம்புரா காவல் நிலையத்தில் தனியார் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடந்தது என்ன? காவல்துறை அளித்த விளக்கம்..

Advertisement

சோனேஷ் என்ற ஏழு வயது சிறுவன் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததால், அவரது பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குப் பரிசோதித்த மருத்துவர் சோனேஷுக்கு முதுகில் ஊசி போட்டு வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து சோனேஷுக்கு முதுகில் கொப்புளங்கள் ஏற்பட்டதால் சிவமொக்காவில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

சோனேஷின் பெற்றோர், அதிகளவு மருந்து செலுத்தி ஊசி போட்டதால் தங்கள் மகன் இறந்ததாக போலீஸில் புகார் அளித்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தனியார் மருத்துவமனையின் மருத்துவர் வருண் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சையில் இளங்கலை (BAMS) பட்டம் பெற்றவர் என்றும், நோயாளிகளுக்கு ஊசி போடும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், மருத்துவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக மாநிலத்தின் தாவணகெரே மாவட்டத்தில் சிசேரியன் பிரசவத்தின்போது பிறப்புறுப்பு அறுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை, சிகிச்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.