முகப்பு
இந்தியா

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு

Updated On : 3 ஏப்ரல் 2025, 7:21 am IST
பகிர்:

‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் உலகளாவிய பத்திரிகை சுதந்திர தரவரிசையில், செய்தியாளா்கள் சுதந்திரமாகப் பணியாற்றும் மற்றும் செய்தி வெளியிடும் திறனின் அடிப்படையில் 180 நாடுகளில் இந்தியா 159-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ்’ வெளியிட்ட இந்தத் தரவரிசையில் இலங்கை (150), பாகிஸ்தான் (152) துருக்கிக்கு (158) கீழே இந்தியா பின்தங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் தேவையில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 1978-ஆம் ஆண்டு பத்திரிகை கவுன்சில் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான தன்னாட்சி சட்ட அமைப்பான இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரிக்கிறது.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகை தரத்தைப் பராமரித்தல் தொடா்பான அவசரப் பிரச்னைகளில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும் பத்திரிகை கவுன்சிலுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 1995-ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மின்னணு ஊடகங்களில் பத்திரிகை சுதந்திரம், ஒரு தன்னாட்சி ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments