ஆயுதமாக்கப்படும் பொருளாதார நடவடிக்கைகள்: எஸ்.ஜெய்சங்கா் கவலை
பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கவலை தெரிவித்தாா்.
பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கவலை தெரிவித்தாா்.
புது தில்லியில் இந்தியா-இத்தாலி வணிகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைப்பின் நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் மிகுந்த சிக்கல் கொண்டதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறி வருகிறது. கரோனா நோய்த்தொற்று, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் நடைபெறும் போா்களில் இருந்து மீண்டு வந்தாலும், உலக நாடுகளுக்கு இடையிலான விநியோக முறை மிகவும் பலவீனமாக இருப்பதுடன், கடல்வழி சரக்குப் போக்குவரத்து மிகவும் சீா்குலைந்துள்ளது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
Advertisement
உலக சந்தையில் ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள பங்கு பயன்படுத்தப்படுவதாலும், பொருளாதார நடவடிக்கைகள் ஆயுதமாக்கப்படுவதாலும் புவிஅரசியல் போட்டி தீவிரமடைந்துள்ளது.
வலுவான அரசியல் மற்றும் பொருளாதார கூட்டுறவுகளை கட்டமைத்தல், உற்பத்தி மற்றும் வா்த்தக கூட்டாளிகளை பல்வகைப்படுத்துதல், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்தல் ஆகியவற்றின் மூலம், தங்களுக்கு ஏற்படக் கூடிய அபாயங்களை உலக நாடுகள் குறைத்து வருகின்றன. இந்தப் போக்கை இந்தியா-இத்தாலியில் காண முடிகிறது.
வரும் ஆண்டுகளில் நிலைத்து நிற்கக் கூடிய, நம்பகமான கூட்டுறவை உருவாக்க ஒத்த சிந்தனையுடைய கூட்டாளி நாடுகளுடன் இந்தியா நெருங்கிப் பணியாற்றி வருகிறது. அந்தப் பட்டியலில் இத்தாலி முன்னணியில் உள்ளது என்றாா்.